எனக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆசிரியை கேத்தரின்: முதல்வர் ஜெயலலிதா புகழஞ்சலி
சர்ச் பார்க் பள்ளியில் தனக்கு ஆசிரியராக இருந்த கேத்தரின் சைமன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”சென்னை பிரசன்டேஷன் கான்வென்ட் சர்ச்பார்க் பள்ளியில் எனது ஆசிரியராக இருந்தவர் கேத்தரின் சைமன். இவரது மறைவு செய்தி கேட்டு நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவர் உன்னதமான ஆசிரியப் பணிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
பிரசன்டேஷன் கான்வென்ட் சர்ச் பார்க் பள்ளியில் கடந்த 1958 முதல் 1964ம் ஆண்டுவரை அவரது மாணவியாக இருந்த நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆசிரியர்- மாணவி இடையிலான மிகச்சிறந்த நல்லுறவை நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.
சர்ச் பார்க் பள்ளியில் அவருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை பெற்ற பலதலைமுறை மாணவிகளுக்கு கேத்தரின் சைமன் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்.
அவரது இரக்க குணம், உறுதியான நிலைப்பாடு ஆகியவை நூற்றுக்கணக்கான இளம் தலைமுறையினரை நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக வளரச் செய்துள்ளது. அவரது ஆன்மா அமைதி பெற வேண்டும்” என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.